Tuesday, October 1, 2013

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்



தமிழ்த் திரையுலகின் பிதாமகர் என்று தென்னிந்தியத் திரையுலகினர் அனைவராலும் கொண்டாடப் படும் கே.பாலசந்தர்  தஞ்சாவூர் மாவட்டம் நன்னீலம் அருகே உள்ள நல்ல மாங்குடி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையார் பெயர் கைலாசம். தாயார் பெயர் காமாட்சி அம்மாள் இவருடன் பிறந்தர்கள் ஒரு சகோதரரும், நான்கு சகோதரிகளும்.

இவரது மனைவி பெயர் ராஜம்., இவரது மூத்த மகன் கைலாசம் சின்னத்திரை தயாரிப்பில் பல சாதனைகள் புரிந்தவர். இப்போது புதிய தலை முறை செய்தித் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் திறம்படப் பணியாற்றி வருகிறார் .இளைய மகன் பிரசன்னா திரைத்துறையில் ஈடு .படாமல் ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்

இவரது ஒரே மகளான புஷ்பா கந்தசாமி திரைத் துறையில் பிரபலமான தயாரிப்பாளராக உள்ளது மட்டுமின்றி பல திரைத்துறை சார்ந்த அமைப்புகளில் பொறுப்பிலும் இருந்துள்ளார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பி.எஸ்.சி ஜுவாலஜி படித்தவர் முத்துப்பேட்டை பள்ளியில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். பிறகு சென்னையில் உள்ள அக்கவுண்ட் சென்ட்ரல் அலுவலகத்தில் சூப்ரெண்ட் அதிகாரியாக வேலை பார்த்தார். அப்போது முதல் நாடகம் மற்றும் கலைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

இவர்இயக்கிய மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம் போன்ற மேடை நாடகங்களுக்கு பெரும் வரவேற்பு  கிடைத்தது. 

இவரது திறமையை பார்த்து எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பை இயக்குனர்  பி.மாதவன், தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியஇருவரும்வழங்கினார்கள்.

இவர் 1965ஆம் ஆண்டு நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம், அபூர்வ ராகங்கள், தில்லுமுல்லு, புன்னகை மன்னன், வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றுமுடிச்சு, அவர்கள், உன்0னால் முடியும் தம்பி என்று எண்ணற்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.

இவருடைய பெரும்பாலான படங்களில் மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூக பிரச்சனைகள் கருப் பொருளாக விளங்கின. 

இன்று சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்தை திரை உலகிற்கு தனது அபூர்வராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தி அவரது திரையுலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன் இவர்தான்

அதே போன்று தனது திறமைக் கேற்ற சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் என்ற மாபெரும் கலைஞனை செதுக்கிய பெருமைக்கு சொந்தக்காரரும் இவரே

ராதாரவி, பிரகாஷ்ராஜ், விவேக், விஜயகுமார், ஜெய்கணேஷ், டெல்லிகணேஷ், முரளி, குயிலி, படாபட் ஜெயலட்சுமி, எனப் பல நடிகர் நடிகைகளை தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்தான் வேற்று மொழிகளில் இருந்து சுஜாதா, ஷோபா, சரிதா, சரத்பாபு எனப் பல நட்சத்திரங்களை தமிழுக்கு அழைத்து வந்தவர்

மௌலி, விசு, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி‌.மகேந்திரன், மேஜர் சுந்தர்ராஜன், காத்தாடி ராமமூர்த்தி என சினிமாவுக்கு இவர் அழைத்து வந்த நாடகக் கலைஞர்கள் பட்டியல் நீளமானது

கோமல் சுவாமிநாதன் எழுதிய தண்ணீர் தண்ணீர் நாடகத்தை அதன் சாரம், காரம் எதுவுமே குறையாமல் படமாக்கி அப்படத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர் பல தரப்பட்ட கதைகள் மூலம் திரை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் வலுவானது

ரஜினிக்கு தில்லு முல்லு  என்ற நகைச்சுவை படத்தின் மூலம் புதிய பரிமாணத்தைத் தந்த இவர்தான் சுகாசினிக்கு சிந்துபைரவி படம் மூலம் தேசிய விருது பெற்றுத் தந்தார். அதில் இசை சாம்ராஜியம் நடத்திய இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைக்கவும் இவரே காரணம்

வர் யக்கிய ஏக் துஜே கேலியே இந்தியில் வசூலில் சாதனை புரிந்த படம். இப்படத்தின் மூலம் தான் கமல்ஹாசன் இந்திப் பட உலகிற்கு அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்த வருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது, தாதா சாகேப் பால்கே விருது போன்ற உயர் விருதுகளை வழங்கி கௌரவித்தது. 

தமிழக அரசு, ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசு வழங்கிய விருதுகளை எண்ணற்ற முறை பெற்றவர் வெளிநாடுகள் பல வற்றில் கணக்கிலடங்காத விழாக்களில் பாராட்டப்பட்டுள்ளார் 

பிற இயக்குனர்களுக்கும் தனது கவிதாலயா நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு அளித்தவர். சின்னத்திரை உலகிலும் தனதுகம்பீரமான முத்திரையை அழுத்தமாகப்பதித்தவர்,

திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, போன்ற பல முக்கியமான திரைத் துறை அமைப்புகளில் தலைவராக பதவி வகித்த பெருமையும் இவருக்குண்டு
- G.Balan Reporter

நடிகர் கவுண்டமணி



கோயம்புத்தூர் மாவட்டம் கண்ணம்பாளையம் அருகில் உள்ள வல்லக்குண்டாபுரம் எனும் சிற்றூரில் 1939 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி  பிறந்தவர் க்வுண்டமணி. இவரது இயர் பெயர் சுப்பிரமணி. தந்தை பெயர் கருப்பையா. தாயார் பெயர் அன்னாம்மாள் என்கிற் காளியம்மாள். இவக்கு மயிலாத்தாள் என்கிற சகோதரி உள்ளார்.

வீட்டில் ஒரே பையன் என்பதால் செல்லம் அதிகம். அவரை அவரது தந்தை அடிக்காமல் வளர்த்தார். சின்ன வயதில் இருந்தே அவருக்கு
நாடகத்தில் நடிப்பதென்றால் கொள்ளை ப்ரியம். அதனால் எப்போது பார்த்தாலும் பள்ளிக்கூடம் போகாமல் நாடகம் பார்க்கவே ஆசைப் படுவாராம். அதனால் அவரது விருப்பப் படியே விட்டுவிட்டாராம் தந்தை.

இப்போது சினிமாவில் இத்தனை வாய் பேசும் கவுண்டமணி, சிறு வயதில் அதிர்ந்து பேச மாட்டாராம். பேசினாலும் மெதுவாகத்தான் பேசுவாராம். ஒரு முறை அக்ரஹாரத்தில் நடந்த ஒரு நாடகத்தில் கவுண்டர் வேடத்தில் நடித்தாராம் கவுண்டமணி. நாடகம் முடிந்ததும் வாழ்த்திப் பேச வந்தவர், ‘‘சுப்பிரமணி அருமையாக நடித்துள்ளார். கவுண்டர்கள் எப்படிப் பேசுவார்களோ அதே போல் ஏற்ற இறக்கத்தில் அற்புதமாக பேசி நடித்தார். அதனால் இன்று முதல் சுப்பிரமணியை கவுண்டமணி என்றே அழைப்போம்’’ என்று பாராடினாராம். அன்றிலிருந்துதான் ‘கவுண்டமணி’யானார் இவர்.

15 வயதில் ‘நானும் நாடகத்தில் நடிக்கப் போகிறேன்’ என்று விடாமல் நச்சரித்ததால் அவரது சகோதரி அவரை சென்னைக்கு அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டாராம். பிறகு எம்.ஆர்.ஆர்.வாசு, ஓ.ஏ.கே.தேவர் நாடகங்களில் நடித்து, பாரதி ராஜா இயக்கிய 16 வயதினில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர், பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளில் நடித்து பெரும் வெற்றி கண்டார். இரண்டு தலைமுறை ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது கொங்கு தமிழ் பேச்சும் வெறுப்பு கலந்த உரையாடல்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, நடிகன், மன்னன், இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், உனக்காக எல்லாம் உனக்காக, முறை மாமன், சூரியன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த் என பல படங்களில் அவரது நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளன.

ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’போன்ற சில படங்களில் குணசித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்

கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள்.  இவர் மட்டும் சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வாய்மை மற்றும் 49ஓ படங்களில் நடித்து வருகிறார். கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்.

திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற இவர், நிஜத்தில் காதல் திருமண்ம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

கவுண்டமணிக்கு புகைப் பழக்கமோ, குடிப் பழக்கமோ, கிடையாது. பார்ட்டிகளுக்கு கூடப் போவதில்லை. தனது பெயருக்கு முன்னால் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்வதில்லை. இவர் பெரிதாகப் படித்தவரில்லை என்றாலும், நிறைய புத்தகங்களை வாசித்தவர். ஒஷோவின் அனைத்து புத்தகங்களையும் கரைத்துக் குடித்தவர். ஆங்கிலப்படங்கள் எதுவானாலும் பார்த்து விடுவார். படத்தைப் பற்றி நண்பர்களுடன் பேசுவார். ஆனால், தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார். அதே போல பேட்டி என்றால் அட போங்கப்பா என்று நாம என்ன செய்துவிட்டோம் என்று அன்பாக மறுத்து விடுவார்.

கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. புதிதாக உருவாகும் நகைச்சுவை நடிகர்கள் எவருமே இவரது சாயல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியாது. 
- G.Balan Reporter